ஆசிரியர்கள் திட்டியதால் 4 மாணவிகள் கிணற்றில் குதித்து தற்கொலை பெற்றோர்கள், உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நவம்பர் 25, 04:45 AM
பனப்பாக்கம்,
வேலூர் மாவட்டம் பனப்பாக்கத்தில் உள்ள காஞ்சீபுரம் ரோடு தெருவை சேர்ந்தவர் ரவி. கூலித்தொழிலாளி. இவரது மகள் சங்கரி (வயது 16). அதே பகுதியை சேர்ந்தவர் பாலு. இவரது மகள் மனிஷா (16), பனப்பாக்கம் அண்ணாநகரை சேர்ந்த குமார் மகள் ரேவதி (16), அதேபகுதியை சேர்ந்த தர்மலிங்கம் என்பவரின் மகள் தீபா (16).
சங்கரி உள்ளிட்ட 4 மாணவிகளும் பனப்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–1 படித்து வந்தனர். இவர்கள் 4 பேரும் சரியாக படிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பள்ளியின் தலைமை ஆசிரியை ரமாமணி மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள் 4 மாணவிகளையும் நேற்று முன்தினம் வகுப்பில் கண்டித்ததாக கூறப்படுகிறது. மேலும் நாளை (அதாவது நேற்று) பள்ளிக்கு வரும்போது பெற்றோரையும் அழைத்து வர வேண்டும் என்று கூறியுள்ளனர். இதனால் 4 மாணவிகளும் பயந்துள்ளனர்.
ஆனால் அவர்கள் இதுகுறித்து பெற்றோரிடம் எதுவும் கூறவில்லை என தெரிகிறது. இந்த நிலையில் 4 மாணவிகளும் நேற்று காலை 8 மணிக்கு வழக்கம்போல் பள்ளிக்கு சைக்கிளில் வந்துள்ளனர். தாங்கள் கொண்டு வந்த புத்தகப்பையை பள்ளியில் வைத்த அவர்கள் பெற்றோரை அழைத்து வராததால் தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்கள் திட்டுவார்களோ என்று பயந்து பள்ளியை விட்டு வெளியே சைக்கிளில் சென்றனர்.
அவர்கள் 4 பேரும் பனப்பாக்கம் அடுத்த மேலபுலம்புதூர் அருகே நங்கமங்கலம் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்திற்கு சென்றனர். அங்குள்ள கிணற்றின் அருகே தங்களது சைக்கிள் மற்றும் காலணிகளை வைத்து விட்டு அமர்ந்து பேசினார்கள். இதையடுத்து அவர்கள் தற்கொலை செய்ய முடிவு செய்தனர். அதன்படி 4 பேரும் கிணற்றில் குதித்தனர். இதனால் தண்ணீரில் மூழ்கினர்.
இதற்கிடையே பிற்பகல் 1 மணி அளவில் 4 மாணவிகளின் புத்தகப்பைகள் வகுப்பில் இருப்பதை பார்த்த சக மாணவிகள் இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்களுக்கு தெரிவித்தனர். பதறிய ஆசிரியர்கள் பள்ளி மற்றும் சுற்றுவட்டாரத்தில் தேடிப்பார்த்தனர். எனினும் அவர்கள் குறித்த தகவல் கிடைக்கவில்லை. 4 பேரும் காணவில்லை. பின்னர் தலைமை ஆசிரியை 4 மாணவிகளின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார்.
பள்ளிக்கு சென்ற தங்கள் மகள்கள் காணவில்லை என்ற தகவல் அறிந்ததும் பெற்றோர் மற்றும் அவர்களின் உறவினர்கள் பள்ளிக்கு விரைந்து வந்தனர். அவர்கள் தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மனவேதனையினால் ஆத்திரம் கொண்ட உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பள்ளி முற்றுகையிடப்பட்டதாக நெமிலி, காவேரிப்பாக்கம், அவலூர் போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு சுமார் 20–க்கும் மேற்பட்ட போலீசார் விரைந்து சென்று பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த நிலையில் நங்கமங்கலம் கிராமத்தில் உள்ள கிணற்றின் அருகே மாணவிகள் 4 பேரின் சைக்கிள்கள் மற்றும் காலணிகள் இருப்பதை பார்த்த அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மாணவிகளின் பெற்றோர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
நடந்த விபரீதம் அறியாமல் என்னமோ.. ஏதோ என்ற பதறிய பெற்றோர் மற்றும் உறவினர்கள், ஆசிரியர்கள் அனைவரும் நங்கமங்கலம் கிராமத்தில் உள்ள கிணற்றுக்கு சென்றனர். அங்கு மாணவிகளின் 4 சைக்கிள்களையும், 3 மாணவிகளின் காலணிகளையும் பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். இதுகுறித்து துணை போலீஸ் சூப்பிரண்டுகள் குத்தாலிங்கம் (அரக்கோணம்), விஜயகுமார் (ராணிப்பேட்டை) தாசில்தார் பாஸ்கர், வருவாய் ஆய்வாளர் ராம்மோகன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது ஒரு மாணவியின் காலணி மட்டும் கிணற்றில் மிதந்ததை பெற்றோர் மற்றும் போலீசார் பார்த்தனர். மாணவிகள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கருதிய போலீசார் அரக்கோணம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த வீரர்கள் ‘பாதாள கொலுசு’ (தண்ணீரில் மூழ்கியவர்களை மீட்கும் கருவி) மூலம் மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
மாணவிகள் கிணற்றில் குதித்த சம்பவத்தை அறிந்த சுற்று வட்டாரத்தை சேர்ந்த 20–க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நங்கமங்கலம் கிராமத்திற்கு வந்தனர். கிணற்றை சுற்றி பொதுமக்கள் கூட்டமாக நின்று சோகத்துடன் பார்த்தனர். இதையடுத்து ஒன்றன் பின் ஒன்றாக 4 மாணவிகளின் உடல்கள் மீட்கப்பட்டன.
ஒவ்வொரு மாணவியின் உடல் மீட்கப்பட்டபோது அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தலையில், வயிற்றில் அடித்துக் கொண்டு புரண்டு அழுதனர். இதனால் அந்த பகுதியே சோகமயமாகியது.
மீட்கப்பட்ட மாணவிகளின் உடல்களை போலீசார் பிரேத பரிசோதனைக்காக எடுக்க முற்பட்டபோது ஆத்திரம் அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், உடல்களை எடுக்கவிடாமல் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி, மாணவிகளின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்
No comments:
Post a Comment